ஜெ. வழக்கு அப்பீல்: கர்நாடகாவின் திருத்தப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு - விரைவில் விசாரணை
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் 27ல் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது.

தண்டனையை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். விசாரணை முடிவில், நால்வரையும் நிரபராதி என்று மே 11ம் தேதி, நீதிபதி சி.ஆர். குமாரசாமி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பில் கணித தவறு உள்ளிட்ட பல்வேறு பிழைகள் இருப்பதாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா தெரிவித்தார். எனவே, அப்பீலுக்கு ஏற்ற வழக்கு இது என்று அரசுக்கு சிபாரிசு செய்தார். கர்நாடக அமைச்சரவையும், இதை ஏற்று, மேல்முறையீட்டுக்கு பச்சைக்கொடி காண்பித்தது.
எனவே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் ஜூன் 23ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்வதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய, 6 பேர் குழுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் நியமித்தது. அந்த குழு நடத்திய ஆய்வில், கர்நாடக அரசின் மனுவில் சுமார் 10 குறைபாடுகள் இருந்தது சுட்டிக் காட்டப்பட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர் குழுவினர் மேல்முறையீட்டு மனுவை திருத்தும் பணியில் ஈடுபட்டது. பணிகள் முடிந்ததும், கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி தாக்கல் செய்தார்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்குக்கு 11477/2015 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கு எண் வழங்கப்பட்டு விட்டதால் அடுத்த வாரத்திலேயே விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications