ஜார்க்கண்ட்: பாவமே.. எப்படி சிக்கி இருக்கு பாஜக! 81-ல் 40 இடங்களை கேட்டு மிரட்டும் கூட்டணி கட்சிகள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள ஜேடியூ, எல்ஜேபி மற்றும் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா ஆகியவை மட்டும் 81 இடங்களில் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கின்றன. மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இந்த கட்சிகளின் மிரட்டலை ஏற்றால் வெறும் 41 இடங்களில்தான் போட்டியிட முடியும் என்பதால் பாஜக பரிதாபமாக விழிபிதுங்கிக் கொண்டு நிற்கிறதாம்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் மொத்தம் 81 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41 இடங்கள்.'

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக மட்டும் 79 இடங்களில் போட்டியிட்டது. அதற்கு முந்தைய 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக மட்டும் 72 இடங்களில் போட்டியிட்டது. 2009-ம் ஆண்டு தேர்தலில் 67 இடங்களில் பாஜக மட்டுமே போட்டியிட்டது.
ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் பாஜகவால் நிச்சயமாக கடந்த தேர்தல்களைப் போல அதிக இடங்களில் போட்டியிட முடியாத நெருக்கடி உருவாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ, சிராக் பாஸ்வானின் எல்ஜேபி, ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவை தனித்துப் போட்டியிடவிடாமல் எங்களுக்கும் இடங்களை ஒதுக்கீடு செய்யுங்கள் என ஜேடியூ, எல்ஜேபி மற்றும் ஹிந்துஸ்தான் ஆவாமி மோர்ச்சா முரண்டு பிடிக்கின்றன. அதுவும் ஜேடியூ 11 அல்லது 12 தொகுதிகளக் கேட்கிறது. எல்ஜேபி 20 தொகுதிகளைக் கேட்கிறது. மத்திய அமைச்சர் மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா கட்சி 10 தொகுதிகளை கோருகிறது. அதாவது மொத்தம் உள்ள 81 இடங்களில் 40 தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்கின்றன. அப்படியான நிலைமையில் பாஜகவால் 41 இடங்களில்தான் போட்டியிட முடியும்.
ஜார்க்கண்ட்டில் இருக்கிற 81 தொகுதிகளில் 3 கட்சிகளுக்கும் தலா 3 இடங்கள் என அதிகபட்சமாக 10 தொகுதிகளை ஒதுக்கினால் பாஜகவால் 71 இடங்களில் போட்டியிட முடியும். ஆனால் இத்தகைய சொற்ப எண்ணிக்கையிலான இடங்களை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் பெற்றுக் கொள்ளுமா? ஒப்புக் கொள்ளுமா? அல்லது மத்திய அரசுக்கான ஆதரவைக் காட்டி மிரட்டல் விடுக்கப் போகின்றனவா? என்பது இனி வரும் நாட்களில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications