ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல் கட்டமாக 13 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 13 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
முதல் கட்டமாக நாளை 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.
ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 6, ஜேஎம்எம் 4, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக 12 தொகுதிகளிலும் ஹூசைனியாபாத்தில் வினோத்குமார் சிங்கை ஆதரித்தும் களத்தில் நிற்கிறது. கடந்த தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஏஜேஎஸ்யூ லோகர்தாகாவில் போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் ஜேவிஎம் தனித்து போட்டியிடுகிறது.
நாளைய தேர்தல் களத்தில் மொத்தம் 189 வேட்பாளர்கள் உள்ளன. இவர்களில் 15 பேர் பெண்கள். மொத்தம் 4,892 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான பகவந்த்பூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக 3,78.004 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக கும்லா தொகுதியில் 2,19, 874 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். லோகர்தாகவில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரோன் போட்டியிடுகிறார். இத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.