பில்லி, சூனியம் வைத்ததாக கூறி வயதான தம்பதி வெட்டிக் கொலை
ராஞ்சி: மாந்த்ரீக செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஜார்க்கண்டில் வயதான கணவன்,மனைவியை வெட்டி கொலை செய்துள்ளனர்.
மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போன ஜார்கண்ட் மாநிலத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து வயதான தம்பதியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குந்தி மாவட்டத்தின் குட்லம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வா ஹரென். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் தனது மனைவி பசந்தி என்பவருடன் பில்லி, சூனியம் போன்ற சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகித்தனர்.
இந்நிலையில், குந்தி மாவட்டத்தில் உள்ள பிகாடன் ரெயில்வே கேட் அருகில் வெட்டுக் காயங்களுடன் 2 பிரேதங்கள் கிடப்பதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் ஜஸ்வா ஹரென் மற்றும் பசந்தியின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களின் உடல் முழுவதும் ஏகப்பட்ட வெட்டுக் காயங்கள் காணப்பட்டதால் சூனியம் வைத்ததாக சந்தேகித்து கிராம மக்கள் இவர்களை கொன்றிருக்கக் கூடும் என போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications