ஜார்க்கண்டில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்த பெண் பலரால் பலாத்காரம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு வேலை பார்ப்பதற்காக தன்னை 12க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 32 வயது முஸ்லீம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள 32 வயது முஸ்லீம் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
நான் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் எனது கணவர் மற்றும் 13 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது 12க்கும் மேற்பட்டோர் அடங்கிய ஒரு கும்பல் எங்கள் வீட்டுக்குள் வந்தது.
அந்த கும்பல் எனது மகளைத் தாக்கியதோடு, எனது கணவரை கையை கட்டி வைத்து அடித்தது. பின்னர் அந்த கும்பல் என்னை பாலியல் பலாத்காரம் செய்தது. நான் பாஜகவுக்கு பணியாற்றுவதால் தான் அந்த கும்பல் இப்படி செய்துள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் காரணம் இருப்பதாக உடனே கூறிவிட முடியாது என்று ஜார்க்கண்ட் மாநில மூத்த போலீஸ் அதிகாரி அனுராக் குப்தா தெரிவித்துள்ளார்.