எனக்கு ஆதரவு இருக்கிறது; எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல்- பீகார் 'மாஜி' மஞ்சி
பாட்னா: பீகார் சட்டசபையில் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது..,ஆனால் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது என்று பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜிதன்ராம் மஞ்சி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்வராக இருந்த மஞ்சி அப்பதவியை விட்டு விலகாததால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இருப்பினும் தமக்கு கட்சியில் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் மஞ்சி தெரிவித்திருந்தார்.
இதனால் இன்று பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மஞ்சிக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பாரதிய ஜனதாவும் மஞ்சியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் திடீரென இன்று காலை ஆளுநரை சந்தித்து தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மஞ்சி. பீகாரில் கடந்த 18 நாட்களாக மஞ்சி நடத்தி வந்த நாடகம் முடிவுக்கு வந்தது.
பின்னர் தமது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் ஜிதன்ராம் மஞ்சி கூறியதாவது:
பீகார் முதல்வர் பதவியில் நான் இருந்தாலும் நிதிஷ்குமாரால் ரிமோட் கண்ட்ரோல் மூலமே இயக்கப்பட்டேன். ஒரு முதல்வர் பதவிக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை.
நிதிஷ்குமாரின் கைப்பாவையாக செயல்பட மறுத்ததால் என்னை பதவி விலகுமாறு வலியுறுத்தினர். நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில் சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுத்து சபாநாயகர் இருக்கைகளை மாற்றி அமைத்தது உரிய மரபு அல்ல.
சட்டசபை சபாநாயகரிடன் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியதாக இருந்தன. என்னை ஆதரித்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டன. முதல்வர் பதவியில் இருந்த எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
பீகார் சட்டசபையைக் கலைக்க பரிந்துரைத்துள்ளேன். பீகார் மாநில சட்டசபைக்கு புதியதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனக்கு இப்போதும் 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இதனால்தான் சட்டசபையில் ரகசியவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கோரினேன்.
ஆனால் அரசியல் சாசனத்தில் அப்படியான ஒரு வாய்ப்பில்லை என்று ஆளுநர் மறுத்துவிட்டார். இதனால் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரைபேரத்தில் நிதிஷ்குமார் ஈடுபட்டார். சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் நிச்சயம் நானே வென்றிருப்பேன்.
இவ்வாறு ஜிதன்ராம் மஞ்சி கூறினார்.
பீகார் சட்டசபை காலவரையன்றி ஒத்திவைப்பு
இதனிடையே பீகார் சட்டசபை காலவரையன்றி ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நிதிஷ்குமார் கூட்டியுள்ளார்.