ஜே.என்.யூ மாணவர் கன்யாகுமார் மீது தாக்குதல்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை கமிஷன் குட்டு
டெல்லி: ஜவகர்லார் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் மீது டெல்லி கோர்ட்டில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அதை டெல்லி போலீசார் தடுக்க தவறி விட்டனர் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் அப்சல் குரு நினைவு தின நிகழ்ச்சி தொடர்பாக தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் இரு தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டார். அப்போது வக்கீல்கள் சிலர் கன்னையா குமார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தில் கன்யா குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க போலீசார் தவறிவிட்டனர். காவல் நிலையத்தில் வைத்து கன்யா குமாருக்கு மனரீதியான உளைச்சலை உருவாக்கி அவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.
பாட்டியாலா நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது முன்கூட்டியே திட்டமிட்டும், ஒருங்கிணைக்கப்பட்டும் நடத்தப்பட்டுள்ளது. கன்யா குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் தவறிவிட்டனர். காவல் நிலையத்தில் கன்யா குமார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள வாக்குமூலமானது போலீசாரால் மிரட்டி எழுதி வாங்கப்பட்டதாகும்.
எனவே அவருக்கு காவல்நிலையத்திலும், திகார் சிறையிலும் உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீதிமன்ற சம்பவத்தில் போலீசார் அலட்சியமாக நடந்துள்ளனர் என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications