கன்யாகுமார் பேன்ட்டில் சிறுநீர் கழிக்கும்வரை அடித்து நொறுக்கினோம்: வாய் விட்டு மாட்டிய வக்கீல்கள்
டெல்லி: தேசத்துரோக வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கன்யாகுமாரை பேண்டில் சிறுநீர் கழிக்கும்வரை 3 மணி நேரம் அடித்து நொறுக்கிவிட்டோம் என்று தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9ம் தேதி நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போது, பாகிஸ்தான் வாழ்க என்றும், இந்தியாவுக்கு எதிராகவும், சில மாணவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
மாணவர் சங்க தலைவர் கன்யாகுமார் அதுபோன்ற கோஷத்தை வெளிப்படுத்தவில்லை என்றபோதிலும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். உமர் காலித் உள்ளிட்ட மேலும் சில மாணவர்கள் தலைமறைவாகியிருந்தனர். இதில் உமர் காலித் நேற்றுமுன்தினம் இரவு ஜே.என்.யூ வளாகத்திற்கு திரும்பினார்.
அடி, உதை
கைது செய்யப்பட்ட கன்யாகுமார் கடந்த 15ம் தேதி டெல்லியிலுள்ள, பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட வழக்கறிஞர்கள் சிலர், காவல்துறையினர் கண்முன்னேயே, கன்யாகுமாரை அடித்து நொறுக்கினர். பத்திரிகையாளர்களுக்கும் சரமாரி அடி விழுந்தது.
ஹைகோர்ட்டில் மனு
இதையடுத்து பாட்டியாலா கோர்ட்டுக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறி, ஹைகோர்ட்டில் ஜாமீனுக்கு அப்ளே செய்துள்ளார் கன்யாகுமார். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள், விக்ரம்சிங் சவுகான், யஷ்பால் சிங் ஆகியோரிடம், இந்தியா டுடே டிவி சேனல் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியுள்ளது.
ரகசிய நிருபர்கள்
வெளியூரை சேர்ந்த வக்கீல் போலவும், அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை போலவும் வேடமிட்டு நிருபர் குழு, ரகசிய கேமரா மூலம், இவ்விரு வக்கீல்களும் கூறிய தகவல்களை படம் பிடித்து அம்பலப்படுத்தியுள்ளது.
பாரத மாதா வாழ்க
விக்ரம் சிங் சவுகான் கூறுகையில், 3 மணி நேரம், கன்யாகுமாரை அடித்து துவைத்தோம். அவரது பேண்ட் நனைந்துவிட்டதை பார்த்தோம். 'பாரத் மாதா கி ஜெய்' என்ற வார்த்தையை சொல்ல சொல்லிதான் அடித்தோம். கன்யாகுமார் பாரத தாய் வாழ்க என கூறியபிறகுதான் விடுவித்தோம். பகத்சிங் விடுதலை போராட்டத்திற்காக உயிரை விட்டபோது அவருக்கு 23 வயதுதான். இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியாவை பழிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் குண்டே போடலாம்
யஷ்பால்சிங் இன்னும் கோபமாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில், கன்யாகுமார் மீது பெட்ரோல் குண்டை வீசவும் நான் ரெடியாக உள்ளேன். இதற்காக என்மீது கொலை வழக்கு பதியப்பட்டாலும் நான் கவலைப்படமாட்டேன்.
உள்ளே போய் அடிப்பேன்
தாக்குதல் வழக்கில் என்னை கைது செய்தால், சிறைக்குள் சென்று, அங்கு வைத்தே கன்யாகுமாரை அடித்து உதைப்பேன். ஜே.என்.யூ பேராசிரியர்கள், பத்திரிகையாளர்களையும், நீதிமன்ற வளாகத்தில் வைத்து நாங்கள் அடித்தோம். அவ்வளவு ஏன், பாதுகாப்பு படை போலீஸ்காரர்களும், எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கத்தான் செய்தனர்.
சபாஷ் போட்ட போலீஸ்காரர்
கன்யாகுமாரை தாக்கியபோது, அருமை, அருமை என போலீஸ்காரர் ஒருவர் கூறினார். நீங்களும் வாருங்கள், சேர்ந்து தாக்கலாம் என்று நாங்கள் அவரை அழைத்தோம். ஆனால், நான் சீருடையில் இருக்கிறேன். என்னால் முடியாது. நீங்கள் நடத்துங்கள். பாடம் கற்பியுங்கள் என போலீஸ்காரர் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.