ஜூலை 27ல் உதயமாகும் “கலாம் அறிவு சார் மையம்”- டெல்லிக்குச் செல்லும் கலாம் உடைமைகள்!
டெல்லி: டெல்லியில் அமைய உள்ள மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுசார் மையத்திற்கு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது உடைமைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஜூலை 27 இல் மேகாலயா ஷில்லாங்கில் உயிரிழந்தார். அவரது நினைவாக டெல்லியில் கலாம் அறிவுசார் மையம் அமைய உள்ளது.
இதில் வைப்பதற்காக கலாம் பயன்படுத்திய புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை வழங்கும்படி ராமேஸ்வரத்தில் உள்ள உறவினர்களிடம் டெல்லி அரசு கேட்டு கொண்டது.
சுற்றுலாத்துறையிடம் ஒப்படைப்பு:
அதன்படி நேற்று, ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் இருந்த அவரது உடைமைகள் டெல்லி மாநில சுற்றுலாதுறை அமைச்சர் கபில் மிஸ்ரா மற்றும் சுற்றுலாதுறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து:
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இறந்த பிறகு அவர் பயன்படுத்திய ஆடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்களை மத்திய அரசு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தது.
கலாம் வீட்டில் அமைச்சர் குழு:
இந்நிலையில், டெல்லியில் அப்துல்கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைத்து அதில், கலாம் பயன்படுத்திய பொருள்களை காட்சிக்கு வைக்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையொட்டி கலாம் பயன்படுத்திய பொருள்களை பெறுவதற்காக டெல்லி மாநில பண்பாடு மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கபில்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் அப்துல்கலாம் வீட்டிற்கு நேற்று வந்தனர்.
பொருட்கள் ஒப்படைப்பு:
அவர்களிடம், அறிவு சார் மையத்திற்கு அப்துல்கலாமின் தொப்பி, குல்லா, துண்டு, இரண்டு கண்ணாடிகள், பெல்ட், வேட்டி, 2 கோட்டுகள், இரு டைகள், சட்டை, கம்பளித்துண்டு, சால்வை, மப்ளர் ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. இப்பொருள்களை அப்துல்கலாமின் அண்ணன் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் பேரன் சேக்சலீம் ஆகியோர் வழங்கினர்.
ஜூலை 27ல் அமைகிறது:
பின்னர் அமைச்சர் கபில் மிஷ்ரா கூறும்போது, ‘‘டெல்லியின் இதய பகுதியான சரோஜினி நகர் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே கலாம் அறிவுசார் மையத்தை நிறுவ முதல்வர் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த மையத்தில் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், அவரது கோட், சூட், பேனா, கலாமுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கலாமின் சகோதரிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அவற்றை டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். டெல்லியில் அமைய உள்ள அறிவுசார் மையம் கலாம் நினைவு நாளான ஜூலை 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.