பெரும் தலைவலி தந்த 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு... திமுக ஒரே குஷி!
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து திமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Recommended Video

டெல்லி: நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஆர்.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரை விடுவிக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி சந்தோலியா மற்றும் பெகுரா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, ஷாகீத் பால்வா உள்ளிட்டோர் மீதும், ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜாத்தியம்மாள், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தனர். இந்த வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வருகை தந்தார்.
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் கீழ் இந்த வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பை வாசித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து திமுகவினர் தமிழகத்திலும், டெல்லி நீதிமன்றம் முன்பும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கட்சியினர் மீது போடப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது தற்போது நிரூபணமாகிவிட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications