தமிழக அரசு கேட்டுக் கொண்டால் ஜெயலலிதாவை இடம் மாற்ற முடியும்- கர்நாடக அரசு அதிகாரிகள்
பெங்களூர்: தமிழக அரசு கோரிக்கை விடுத்தால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற முடியும் என்று கர்நாடக அரசு அதிகாரிகள் தரப்பி்ல் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, தயக்கமும் இல்லை. உண்மையில் அவரை மாற்றுவதன் மூலம் கர்நாடக போலீஸாருக்கு கூடுதல் சுமை குறையும், நிர்வாக ரீதியாகவும் நாங்கள் சற்று நிம்மதியாக இருக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா கைது செய்யப்பட்டது முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் அடைக்கப்பட்டுள்ள அவரைக் காண தினந்தோறும் பெருமளவிலான தொண்டர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் அவர்களைச் சமாளிக்க போலீஸார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடம் மாற்ற நாங்க ரெடி
இதுகுறித்து கர்நாடக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தமிழக அரசின் சிறைத்துறையிடமிருந்து முதலில் எங்களுக்கு முறைப்படி கோரிக்கை வர வேண்டும்.

விரைவாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்
அப்படி கோரிக்கை வந்தால் உடனடியாக நாங்கள் நடவடிக்கையில் இறங்குவோம். விரைவில் ஜெயலலிதாவை இங்கிருந்து மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

விதிமுறைப்படி
அதேசமயம், அனைத்து விதிமுறைகளையும், சட்ட திட்டங்களையும், கோர்ட் ஆலோசனையையும் பெற்று நாங்கள் செயல்படுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

தயங்கும் அதிமுக அரசு
ஆனால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவது தொடர்பான கோரிக்கையை வைக்க தமிழக அரசு தயங்குவதாக தெரிகிறது. இதனால் ஜெயலலிதாவுக்கு சட்டச் சிக்கல் வந்து விடுமோ என்று அவர்கள் தயங்குகின்றனராம்.

மாநில அரசு கோரிக்கை வைத்தால் போதும்
கைதிகளை சிறைமாற்றம் செய்வது தொடர்பாக முன்னாள் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் அசோக் ஹரனஹள்ளி கூறுகையில், உரிய காரணத்தைக் கூறி ஒரு கைதியை சிறை மாற்றம் செய்யுமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்தால் நிச்சயம் இடமாற்றம் செய்ய முடியும். சட்டம் அதை அனுமதிக்கிறது.

கைதியே கூட கோரிக்கை வைக்கலாம்
அரசுதான் என்றில்லை சம்பந்தப்பட்ட கைதியே கூட கோரிக்கை விடுக்க வழியுள்ளது. உரிய காரணத்தைக் கூறி கைதி கோரிக்கை வைக்கும்போது அதை மாநில அரசு நிச்சயம் பரிசீலிக்க முடியும்.












Click it and Unblock the Notifications