அவர் எவ்வளவு பெரிய மனுஷன்.. ராகுல் இப்படி பேசலாமா.. தேவ கவுடாவிற்கு 'ஐஸ்' வைக்கும் மோடி!
கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி முதல்முறையாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவ கவுடாவை ஆதரித்து பேசி இருக்கிறார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி முதல்முறையாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவ கவுடாவை ஆதரித்து பேசி இருக்கிறார். அதேபோல் ராகுல் காந்திக்கும் தேவ கவுடாவிற்கு இடையில் பிரச்சனையை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளார். இது கர்நாடக தேர்தலில் மோடி ஆட்சி அமைக்க செய்யும் புதிய யுக்தி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.
இதுவரை கர்நாடக தேர்தல் குறித்து வந்த கருத்து கணிப்புகளில் கடைசியாக வந்த சி- ஃபோர் கருத்து கணிப்பை தவிர மற்ற எல்லாவற்றிலும் தொங்கு சட்டசபை உருவாகும் என்றே கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்கள் வரை பாஜக எப்படியாவது மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கலாம் என்ற கனவில் இருந்தது. இந்த நிலையில் தற்போது மோடியே அந்த கனவில் இருந்து வெளியே வந்து புதிய திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்.
நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி குறித்து மோடி பேசும் போது ''ராகுல் காந்தி தேவ கவுடாவை இகழ்ந்து பேசி விட்டார், தேவ கவுடா பெரிய மனிதர். ராகுல் காந்தி போன்ற சிறியவர்கள் அப்படி பேசுவது மிகவும் தவறான ஒன்று'' என திடீர் என்று தேவ கவுடா மீது பாசத்துடன் பேசியுள்ளார். ஆனால் இந்த திடீர் பாசத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் தேவ கவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே ஆட்சி அமைக்க முடியும். இதன் காரணமாகவே மோடி திடீர் என்று தேவ கவுடாவிற்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார். இது பிரதமர் மோடி தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டதை குறிக்கிறது என்று சித்தராமையா கிண்டல் செய்து பேட்டி அளித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இப்போதே பல மாற்றங்கள், கூட்டணி அஸ்திவாரங்கள் போடப்பட்டுள்ளது. பாஜக முதல்முறை கொஞ்சம் அச்சத்துடன் ''பிளான் பி'' போட்டு களமிறங்கி உள்ளது. இன்னும் என்ன மாதிரியான புதிய அரசியல் திட்டங்கள் உருவாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.