ஏசுதாஸுக்கு கர்நாடக ராஜ்யோத்சவா விருது.. நாளை வழங்குகிறார் சித்தராமையா
தேர்ந்தெடுக்கப்பட்ட பல்துறை அறிஞர்களுக்கு நாளை விருது வழங்குகிறார் கர்நாடக முதல்வர்.
பெங்களூரு : நாளை நடக்கவிருக்கும் விழாவில் கர்நாடகாவின் முக்கிய விருதான கர்நாடக ராஜ்யோத்சவாவை 62 பேருக்கு வழங்க இருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
கர்நாடகாவில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னட மொழி பேசும் மாநிலமாக கர்நாடகா உருவான தினத்தை அந்த மாநில அரசு கொண்டாடி வருகிறது.
அந்த தினத்தில் கர்நாடகாவைப் பெருமைப்படுத்தும் விதமாக செயல்படும் பல்துறை அறிஞர்களுக்கும் விருது வழங்குவது வழக்கம். அப்படி இந்த ஆண்டிற்கான விருதை நேற்று கர்நாடக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அமைச்சரான உமாஸ்ரீ அறிவித்தார்.
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, பாடகர் யேசுதாஸ், ஹாக்கி விளையாட்டு வீரர் ரகுநாத், நடிகை காஞ்சனா, எழுத்தாளர் வைதேகி என மொத்தம் 62 பேருக்கு இந்தவிருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை நாளை நடைபெற உள்ள விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வழங்க இருக்கிறார். ஒரு லட்ச ரூபாய் பணம், 20 கிராம் எடையுள்ள கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் இதில் அடங்கும்.
இதில் ராமச்சந்திர குஹாவிற்கு விருது வழங்கப்படுவது பெரும் ஆச்சர்யத்தை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக அரசியலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் குறித்து பலமான குற்றச்சாட்டுகளை அவர் வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.