"பிபி" பவானி சிங்கைப் பார்த்துப் 'பக பக'வென சிரித்த கர்நாடக உயர்நீதிமன்றம்!
பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா, அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் பற்றி குறிப்பிட்டபோது நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் வாய் விட்டு சிரித்தபோது பவானிசிங் நெளியும் நிலை ஏற்பட்டது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் உள்ளிட்ட நான்கு மனுக்களை நேற்று நீதிபதி சந்திரசேகரா பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் ஜாமீன் மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுக்களை மட்டும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மற்ற இரு மனுக்களை விசாரணைக்கு ஏற்று விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
35 நிமிட தீர்ப்பு
நீதிபதி தனது தீர்ப்பை கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்கு வாசித்தார். தீர்ப்பை அவர் வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு விட்டதாக வெளியில் செய்தி பரவி விட்டது.
கொண்டாட்டம் பிளஸ் சோகம்
இதனால் தமிழகத்தில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் குதித்தன. ஆனால் நீதிபதியின் தீர்ப்பின் முடிவில் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக கூறிய தகவல் வெளியானதும் அது சோகமாக மாறிப் போனது.
"பிபி" குறித்த கருத்து
நீதிபதி தனது தீர்ப்பின்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் குறித்த கருத்துக்களை வெளியிட்டபோது நீதிமன்றத்தில் கலகலப்பு ஏற்பள்ளது.
சிரிப்பலையில் மூழ்கிய கோர்ட்
நீதிபதி சந்திரசேகரா, பவானி சிங் குறித்துக் கூறுகையில், பிபி பவானி சிங் விடுமுறை கால நீதிமன்றத்தில் ஆஜரானபோது, கடுமையான ஆட்சேபனை தெரிவித்து அபிடவிட் கொடுத்துள்லார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யவும் அவர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஆட்சேபனை இல்லை என்று வாய் மூலமாக கூறியுள்ளார் என்று அவர் கூறியதைக் கேட்டு அனைவரும் வாய் விட்டுச் சிரித்துள்ளனர்.
நெளிந்து பவானி சிங்
நீதிபதி சொன்னதையும், கோர்ட்டில் சிரிப்பலை பரவியதையும் பார்த்த பவானி சிங் தானும் மெல்லிதாக புன்னகைத்தபடி நெளிந்ததைக் காண முடிந்தது.
பல்டி அடித்தது ஏனோ
ஆரம்பத்தில் ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்த்து விட்டு பின்னர் அவர் பல்டி அடித்தது ஏன் என்பதற்கு இதுவரை பவானியிடமிருந்தும் கூட விளக்கம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.