பாலியல் வழக்கு: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு
பெங்களூர்: நித்யானந்தா உடலுறவு கொள்ள திறன்கொண்டவரா என்பதை போலீசார் அறிந்துகொள்ளும் வகையில், அவரிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சாமியார் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என, நித்யானந்தாவுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விசாரித்து வரும் கர்நாடக போலீசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையேற்ற ராம்நகர் செஷன்ஸ் கோர்ட், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நித்யானந்தா கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ஆண்மை பரிசோதனை செய்யக்கூடாது என்றும், செஷன்ஸ் கோர்ட் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனவே செஷன்ஸ் கோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட் இதுகுறித்து விசாரணையை தொடங்கியது.
விசாரணை முடிந்துள்ள நிலையில் ஐகோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பில், "நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளதற்கு தடை விதிக்க முடியாது. நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து ஆண்மை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், வரும் 28ம்தேதி முதல் இந்த வழக்கில், செஷன்ஸ் கோர்ட், சாட்சியங்களிடம் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளது.
தனக்கு சிறுவனை போன்ற உடலமைப்புதான் இருப்பதாகவும், பாலியல் சார்ந்த செயல்பாடில் ஈடுபட முடியாது என்றும் நித்யானந்தா ஏற்கனவே கூறியிருந்தார். எனவேதான் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.