ஆதரவாக தீர்ப்பு கூற ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற கர்நாடக நீதிபதி கைது
பெங்களூர்: அறக்கட்டளையொன்றுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதற்காக ரூ.1 லட்சம், லஞ்சம் பெற்ற கர்நாடக நீதி கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், பசவகல்யாண் நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் சரவணப்ப சஜ்ஜன். அறக்கட்டளை தொடர்பான வழக்கில் ஒருதரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க கீர்த்திராஜ் போஸ்தே என்பவரிடம் இருந்து சரவணப்ப சஜ்ஜன், கடந்த 2014 டிசம்பர் 23ம் தேதி, ரூ.1 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவினர் நீதிபதி சரவணப்ப சஜ்ஜன் மற்றும் பாபுராவ், கவுசிக் ஜாகிர்தார் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். சஜ்ஜன் தவிர்த்த மற்ற இருவரும் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி முதல் வாரத்தில் சரவணப்ப சஜ்ஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். போலீஸ் விசாரணையில் லஞ்ச புகாருக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பது தெரியவந்ததால் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தானூர் நகரில் உள்ள வீட்டில் நேற்றுமுன் தினம் சஜ்ஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி நஞ்சுண்டையா முன்பு அவர் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு 15 நாட்கள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தான், கடனாக ரூ.1 லட்சம் வாங்கியதாக சரவணப்பா சஜ்ஜன் நிருபர்களிடம் தெரிவித்தார்.