சிறையில் சசிகலாவை சந்தித்து தமிழில் நலம் விசாரித்த கர்நாடக உள்துறை அமைச்சர்!
பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரராஹா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்துவிட்டு சலுகைகளை அனுபவித்ததாக புகார் எழுந்தது.
புகார் தெரிவித்த அதிகாரி ரூபா வேறு துறைக்கு மாற்றப்பட்டார். குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறைத்துறை டிஜிபி சத்யநாராணயா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பணி ஓய்வு பெற்றார்.
புதிய உள்துறை அமைச்சர்
இந்த நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சராக இருந்த பரமேஸ்வரா காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகிப்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராமலிங்க ரெட்டி உள்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
ஆய்வு
உள்துறை அமைச்சரான பிறகு முதல் முறையாக நேற்று அவர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் ஆய்வு நடத்தினார், ராமலிங்க ரெட்டி. அப்போது சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பகுதிக்கும் சென்றுள்ளார்.
சலுகைகள் இல்லை
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், கவுரி லங்கேஷை கொலை செய்தவர்கள் விரைவில் இதே சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் சிறைச்சாலையில் யாருக்கும் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. சசிகலா உள்ளிட்ட அனைவரும் சிறை விதிமுறைப்படியே நடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
தமிழில் பேச்சு
இதனிடையே, சிறைக்குள் விசிட் செய்தபோது, அமைச்சரை பார்த்து சசிகலா கையெடுத்து கும்பிட்டதாகவும், பதிலுக்கு ராமலிங்க ரெட்டியும் வணக்கம் தெரிவித்ததாகவும், சாப்பிட்டீர்களா என ராமலிங்க ரெட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. ராமலிங்க ரெட்டியின் மனைவி மதுரைக்காரர். அவரது வீட்டில் தமிழ் நாளிதழ்கள் வாங்கப்படுவது வழக்கம். எனவே ஓரளவுக்கு தமிழ் பேச அறிந்த ராமலிங்க ரெட்டி, சசிகலாவிடம் தமிழில்தான் பேசியதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.