பெங்களூரிலிருந்து சென்னைக்கு 'புல்லட்'டில் வரலாம்.. ஜப்பான் உதவியுடன்!
பெங்களூர்: பெங்களூர் நகரிலிருந்து சென்னை, மைசூருக்கு புல்லட் ரயில்களை இயக்க கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டு தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் இதை செயல்படுத்தவும் கர்நாடகா தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் பெங்களூர் நகரிலிருந்து சென்னை, மைசூருக்கான பயண நேரம் குறையும் என்றும், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
சீனாவுக்குப் போன ராமையா
சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார் சித்தராமையா. அங்கிருந்து திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய ரயில்வேயுடனும், ஜப்பானிய நிபுணர்களுடனும் எங்களது அதிகாரிகள் இதுதொடர்பாக பேசி வருகின்றனர்.
முதலில் சென்னை, மைசூருக்கு
முதல் கட்டமாக பெங்களூரிலிருந்து சென்னை, மைசூருக்கு புல்லட் ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
சீனாவில் ஜப்பான் அமைச்சருடன் பேச்சு
சீன பயணத்தின்போது, ஜப்பான் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஹகுபுன் ஷிமோனுராவுடன் நான் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினேன். நிதியுதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்டவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
ஜப்பான்தான் பர்ஸ்ட்
உலகிலேயே புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்திய முதல் நாடு ஜப்பான்தான். 1960களிலிருந்து அங்கு அந்த ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எனவே அவர்களது தொழில்நுட்பமே சிறந்தது.
அரை மணி நேரத்தில் மைசூர்.. ஒரு மணி நேரத்தில் சென்னை
பெங்களூர்- மைசூர் இடையிலான தூரம் 150 கிலோமீட்டர் ஆகும். இதை புல்லட் ரயிலில் அரை மணி நேரத்தில் அடைந்து விடலாம். அதேபோல பெங்களூர் - சென்னை தூரம் 360கிலோமீட்டர். அதை ஒரு மணி நேரத்திற்கும் சற்று கூடுதலான நேரத்தில் அடைந்து விடலாம்.
ஹூப்ளி, மங்களூருக்கும்
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மங்களூர், ஹூப்ளி ஆகிய நகரங்களுக்கும் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.