காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தால் மக்கள் சேவையாற்ற முடியாது என நம்புகிறேன்.. சிந்தியா விளக்கம்
போபால்: காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தால் மக்கள் சேவையாற்ற முடியாது என நம்புகிறேன் என தனது ராஜினாமா கடிதத்தில் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு சிந்தியா உள்பட 17 எம்எல்ஏக்கள் போர்க் கொடி உயர்த்தினர். இவர்கள் அனைவரும் பெங்களூரில் ஒரு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய மிகவும் பாடுபட்டவர் சிந்தியா. இவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு கமல்நாத்துக்கு சென்றுவிட்டது.

ஓராண்டு
ம.பி. மாநில தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் கைவிட்டு சென்றது. கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகள் கிடைக்காததால் கடந்த ஓராண்டாகவே கமல்நாத் அரசுடன் இணக்கமான சூழலை சிந்தியா கடைபிடிக்கவில்லை.

3ஆவது பதவி
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்ட திக் விஜய் சிங் உள்பட 3 பேரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பதவிகளில் காங்கிரஸ், பாஜகவுக்கு தலா ஒரு எம்பி பதவி கிடைக்கும். 3ஆவது பதவிக்கு இரு கட்சியினரிடையே போட்டி இருக்கும்.

மனஉளைச்சல்
அந்த ஒரு பதவியும் மீண்டும் திக் விஜய் சிங்கிற்கே வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனினும் மூத்த தலைவர்கள் அந்த பதவியை பிரியங்கா காந்திக்கு வழங்குமாறு கோரி வருகின்றனர். இதனால் மாநிலங்களவை எம்பி பதவியும் கை கொடுக்காத நிலையில் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

ஆட்சி கவிழும்
இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்து 16 எம்எல்ஏக்களை கர்நாடகத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார். அவர் உள்பட 17 எம்எல்ஏக்களின் தொலைபேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என தெரிகிறது.

மோடியுடன் சிந்தியா சந்திப்பு
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சிந்தியா சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருக்கையில் காங்கிரஸ் கட்சியில் 18 ஆண்டுகளாக முக்கிய நபராக இருந்தேன். தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது.
|
அடிப்படை உறுப்பினர் பதவி
இந்த ராஜினாமா மூலம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன். கடந்த ஒரு ஆண்டாக நான் வெளியேறுவதற்கான சூழல் நிலவி வந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆரம்பத்திலிருந்து என்னுடைய முக்கிய நோக்கமே எனது மாநில, நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதுதான். காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தால் மக்கள் சேவையாற்ற முடியாது என நம்புகிறேன். இதனால் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். இத்தனை நாட்கள் தேசத்திற்கு பணியாற்ற ஒரு வாய்ப்பு கொடுத்த கட்சிக்கும் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என சிந்தியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications