6 மாதங்களுக்குப் பின் திறந்தது கேதார்நாத் கோயில்... (பய)பக்தியுடன் வந்த பக்தர்கள்!
கேதார்நாத்: இமயமலையில் உள்ள புனிதத் தலமான கேதார்நாத், பல்வேறு மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பக்தர்கள் தரிசனத்துக்காக ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட பின் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டது இந்த ஆலயம்.
இதுகுறித்து பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டியின் தலைமை நிர்வாக இயக்குநர் வி.டி. சிங் கூறியதாவது:
தலைமை அர்ச்சகரான பீமா சங்கர லிங்கின் தலைமையில், வேத மந்திரங்கள் ஓத அதிகாலை 5.55 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. அப்போது 600 பக்தர்கள் கூடியிருந்தனர்.
கோவில் திறக்கப்பட்ட முதல் நாளே 8 வெளிநாட்டவர்கள் உள்பட 1,500க்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர்.
எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் வருகை தந்தனர். இதனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு மக்களின் மனதில் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு குறைந்ததாக தெரிகிறது.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக கோவில் கமிட்டியினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கும் வகையில் தாற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேவையான அளவு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன," என்றார்.
கேதார்நாத் போகும் பாதையில் பனிப் பொழிவு அதிகமாக உள்ளது. கடைசி மூன்று கிலோ மீட்டர் தூரம் பாதையில் பனி குவியல் காணப்படுகிறது. இதை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 11,700 அடி உயரத்தில் உள்ளது கேதார்நாத். கடந்த ஆண்டு இங்கு ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தால் பல ஆயிரம் பேர் இறந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த கேதார்நாத் கோவில் வாசலிலும் உள்ளும் பலரது சடலங்கள் கிடந்தது குறிப்பிடத்தக்கது.