காவிரி: கண்ணீர்ப் புகை குண்டுகள், தீயணைப்பு வாகனங்களை தயாராக வைக்க கர்நாடக காவல்துறைக்கு உத்தரவு
பெங்களூரு: பதற்றமான சூழ்நிலைக்கிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதால் கர்நாடகாவில் காவிரி பாசனமாவட்டங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகள், தீயணைப்பு வாகனங்களை தயார்நிலையில் வைக்க கர்நாடக காவல்துறையினரை அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.
காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவட உச்சநீதிமன்றம் கடந்த 15 தினங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேற்பார்வைக்குழு
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி மேற்பார்வைக்குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
செப்டம்பர் 20ம் தேதி வரை தமிழகத்திற்கு 12 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று மாலையே தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்திவிட்டது கர்நாடகா. காவிரி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவை தமிழக அரசும், கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கர்நாடகாவில் மீண்டும் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
எனவே அதை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் 32 மணிநேரம் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
பெங்களூருவில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு தொடரும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மாண்டியா மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் உத்தரவு
பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக, கர்நாடகா மாநில போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவிரி பாசனப் பகுதிகளில் காவல்துறையினர் உஷாராக இருக்குமாறு மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார். கண்ணீர் புகைக்குண்டுகள், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.