என் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தினால்... கணக்கில் வராத 4 மப்ளர்கள் தான் கிடைக்கும்: கெஜ்ரிவால்
டெல்லி: என் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தினால் கணக்கில் வராத 4 மப்ளர்கள் மட்டும் தான் கிடைக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்புடைய ஆவணங்களை எடுப்பதற்காகத் தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

இந்நிலையில் சிபிஐ சோதனை தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில்,
ஆட்டோ பெர்மிட் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் 3 பேர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டேன். இப்போது இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துள்ளோம். இதில் ஒரு அதிகாரி வீட்டில் இருந்து பல கிலோ தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எனது அலுவலகத்தில் சமீபத்தில் பிரதமர் மோடியால் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு வேளை சி.பி.ஐ. எனது வீட்டில் சோதனை நடத்தினால் கணக்கில் வராத 4 மப்ளர்கள் தான் கிடைக்கும், வேறு எதும் கிடைக்காது' என நகைச்சுவையாக அவர் தெரிவித்துள்ளார்.
குளிருக்காக தலை மற்றும் கழுத்தை சுற்றி எப்போதும் ஒரு துணியை (மப்ளர்) அணிவது கெஜ்ரிவாலின் வழக்கம். இதன் காரணமாகவே அவரை மக்கள் மப்ளர் வாலா என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications