முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை- பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.
கேரளாவில் முதல்வராக பதவி ஏற்ற பினராயி விஜயன் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இருவேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தார். முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தேவையில்லை என முதலில் கூறியிருந்த அவர் பின்னர் அதை மறுத்தார்.
இதனால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும் என அம்மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் கூறியதாவது:
முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்பதே கேரளாவின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனாலும் இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் மத்திய அரசின் துணையின்றி கேரளா தன்னிச்சையாக செயல்பட முடியாது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தேவையற்றது. இந்த விவகாரத்தில் புதிய பிரச்னை எதுவும் இல்லாததால் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு இப்போது அவசியமில்லை. அப்படி பிரச்சனை வரும்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம்.
பழமையான முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை தொடர்பாக கேரளா முன்வைக்கின்ற வாதத்தை தமிழகமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாததால் சர்வதேச வல்லுநர் குழு மூலம் அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.