மாட்டிறைச்சி தடை.. என்ன உத்தரவு போட்டிருக்கு மதுரை ஹைகோர்ட்.. கேட்கிறது கேரளா ஹைகோர்ட்!
மத்திய அரசின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை எவ்வாறு தடை விதிக்க முடியும் என்று கேரள நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவனந்தபுரம் : இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பிற்கு தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவ்னீத் பிரசாத் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் எந்த விதிமீறலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்போது வாதிட்ட அட்வகேட் ஜெனரல் சுதாகர பிரசாத், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் உத்தரவிற்கு மதுரை ஐகோர்ட் கிளை எவ்வாறு தடை விதிக்க முடியும்? மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக போராடுவோர், உத்தரவு விபரத்தை சரியாக படிக்கவில்லை என்றே தெரிகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள உத்தரவின்படி, பசுவதை, மாட்டிறைச்சி உண்பது, விற்பதற்கு தடையில்லை.
அதே சமயம் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவு மத்திய அரசை எதிர்த்து போராடும் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.