சிகிச்சை அளிக்காததால் பலியான முருகன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றது கேரள சிபிஎம்
உரியச் சிகிச்சை அளிக்காமல் பலியான தமிழக தொழிலாளி முருகனின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்றது கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சிபிம் குழு.
கொல்லம்: மருத்துவமனையில் உரியச் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால் உயிரிழந்த முருகனின் குழந்தைகளின் கல்விச் செலவை கொல்லம் மாவட்ட சிபிஎம் குழு ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், கொல்லத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு முருகனும், முத்துவும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முருகனை தவிர மற்ற 3 பேரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மறுப்பு
முருகனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கொல்லத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர்.
தொடர்ந்து அலைக்கழிப்பு
இதனைத் தொடர்ந்து மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எஸ்.யு.டி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு முருகனை அழைத்துச் சென்றும் எங்கும் அவருக்குச் சிகிச்சை அளிக்கவில்லை. தொடர்ந்து 7 மணி நேர அலைச்சலுக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்தது.
கொந்தளிப்பு
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசின் மீது கண்டனங்கள் பாய்ந்தது.
முதல்வர் மன்னிப்பு
இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன், நடந்த தவறுக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கொந்தளிப்பு சற்று ஓய்ந்தது.
கல்விச் செலவை ஏற்றது சிபிஎம்
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த முருகனின் குழந்தைகளின் கல்விச் செலவை கேரள மாநில சிபிம் ஏற்றுக் கொண்டது. கொல்லம் மாவட்ட சிபிஎம் குழு, குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது. இது உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.