கேரளா உள்ளாட்சித் தேர்தல்... வரிந்து கட்டும் காங்.- இடதுசாரிகள்... கால் பதிக்க துடிக்கும் பா.ஜ.க.
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சித் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். மற்றும் இடதுசாரிகளின் எல்.டி.எப். இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதுவும் இத்தேர்தலில் 3வது அணியாக பா.ஜ.க.வும் களமிறங்கி எப்படியும் கேரளாவில் கால்பதித்துவிட துடிக்கிறது.
கேரளாவில் வரும் நவம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி முன்னணிகளுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் 'அரை பரீட்சை' போல முக்கியத்துவமான ஒன்றாகும்.

இத்தேர்தலில் ஈழவா சமூகத்தின் ஸ்ரீ நாரயண தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பின் உதவியுடன் கேரளாவில் கால்பதிக்க பா.ஜ.கவும் முயற்சிக்கிறது. இது இடதுசாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் ஈழவா சமூகமே அவர்களது பெரும்பான்மையான வாக்கு வங்கி. தற்போது பா.ஜ.க.- எஸ்.என்.டி.பி. கூட்டணியானது இந்த வாக்கு வங்கியை வேட்டையாட காத்திருக்கிறது.
இதனால் ஈழவா சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசன் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்து வௌர்கிறது. மேலும் ஆளும் காங்கிரஸ் அரசுதான் விலைவாசி உயர்வுக்கும் காரணம் எனவும் இடதுசாரிகள் பிரசாரம் செய்து வருகின்றன.
அத்துடன் கேரளாவில் காங்கிரஸ் கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் ரகசிய உறவு வைத்துள்ளதாகவும் இடதுசாரிகள் அதிரடி குண்டுவீசி வருகின்றனர். இந்த நிலையில் நிதி அமைச்சர் மானி மீதான லஞ்ச ஒழிப்பு புகார் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இடதுசாரிகளுக்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் ஆளும் காங்கிரஸ்- இடதுசாரிகளிடையே கடுமையான போட்டியே நிலவுகிறது.
சமூக வலைதளம் மூலம்..
இதனிடையே கண்ணூர் மாவட்டம் தலசேரியில் 2006ஆம் ஆண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகி முகமது பைசல் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கராயி சகோதரர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதித்த நீதிமன்றம் மாவட்டத்துக்குள் செல்ல தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இரு சகோதரர்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பிரசாரங்களை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் புதிய திருப்பமாக முகமது பைசலை படுகொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என அவரது குடும்பத்தினரும் இந்த சகோதரர்களுடன் கை கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications