முடங்கும் மேற்கு வங்கம்! மம்தா அரசுக்கு எதிராக நாளை பந்த்.. கொல்கத்தா மருத்துவர் கொலை.! பரபரப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலையைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அங்குள்ள மாநில அரசைக் கண்டித்து பாஜக நாளைய தினம் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தடியடி எல்லாம் நடத்தப்பட்ட நிலையில், பாஜகவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டங்கள்: இந்த விவகாரத்தில் கொல்கத்தா போலீசாரின் செயல்பாடுகள் விமர்சனத்தைக் கிளப்பிய நிலையில், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே உண்மையான குற்றவாளிகளைக் காக்க திரிணாமுல் அரசு முயல்வதாகவும் இதனால் மம்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அம்மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக அங்குள்ள மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன்படி மம்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அம்மாநிலத் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக சுமார் 10 கிமீ தூரம் பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி வந்தனர்.
"நிறைய ஆதாரம் இருக்கு.." சிபிஐ சொன்ன அதிமுக்கிய தகவல்.. கொல்கத்தா மருத்துவர் கொலையில் திருப்பம்?
மோதல்: இருப்பினும், இந்தப் போராட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி தராத நிலையில், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ரயில்வே தண்டவாள கற்களை எடுத்த போராட்டக்காரர்கள் அதை போலீசார் மீது வீசினர். போராட்டக்காரர்களைக் கலைந்து போக போலீசார் எச்சரித்த போதும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் சரமாரியாகத் தடியடி நடத்தினர். மேலும், தண்ணீரைப் பீய்ச்சியும் அவர்களைக் கலைக்க முயன்றனர். இதனால் அந்த பகுதி முழுக்க போர்க்களம் போல மாறியது.
பந்த் போராட்டம்: மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜகவும் இப்போது நேரடியாகப் போராட்ட களத்தில் குதித்துள்ளது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொலை வழக்கில் மேற்கு வங்க அரசைக் கண்டித்து பந்த் போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
மேற்கு வங்க அரசைக் கண்டித்து நாளைய தினம் 12 மணி நேர பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படுவதாக மத்திய அமைச்சரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் அறிவித்துள்ளார்.
என்ன நடந்தது: கடந்த ஆக. 9ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும், அவர்கள் சரியாக விசாரணை நடத்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தினர். அதேபோல கல்லூரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மற்றும் சந்தேகப்படும் சிலரிடமும் அதிகாரிகள் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் வழக்கில் பல திருப்பங்கள் நடக்கலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications