ரஜினியே இங்கு வந்து அணைகளைப் பார்வையிட்டு தண்ணீரையும் திறந்து விடட்டும்.. குமாரசாமி நக்கல்
ரஜினிகாந்தே கர்நாடகா மாநிலத்துக்கு வந்து தண்ணீர் திறந்துவிடட்டும் என்று குமாரசாமி நக்கலாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
பெங்களூர்: ரஜினிகாந்தே கர்நாடகா மாநிலத்துக்கு நேரில் வந்து அணைகளை பார்வையிட்டு பிறகு தண்ணீர் இருந்தால் அவரே திறந்து விடட்டும் என்று குமாரசாமி நக்கலாக தெரிவித்தார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா அரசு பதவியேற்ற கையோடு வீடு திரும்பியது. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அரசு அமையவுள்ளது.
இதில் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி முதல்வராக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார்.
ரஜினி சந்திப்பு
ரஜினி மகளிர் மக்கள் மன்றத்தினரை நேற்று போயஸ் தோட்டத்தில் ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசு தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
குமாரசாமி பேட்டி
பெங்களூரில் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் விவகாரத்தில் காவிரி அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் தாராளமாக திறக்கப்படும். ஆனால் தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என வலியுறுத்துவதால் இங்குள்ள நிலையை தமிழர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை.
வந்து பார்க்கட்டும்
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தே விட வேண்டும் என்று ரஜினி விரும்பினால் அவர் கர்நாடகத்துக்கு வரட்டும். இங்குள்ள அணைகளின் நீர் மட்டத்தை நேரில் காணட்டும். அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கூடிய அளவுக்கு தண்ணீர் இருந்தால் ரஜினியே திறந்து விடட்டும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். கர்நாடகா அணைகளின் நிலையை அவர் வந்து பார்த்தால் நிச்சயம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறமாட்டார் என்றார்.
இரு மாநிலங்களும் பாதிப்பு
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக குமாரசாமி திருச்சி வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி பிரச்சினையில் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நான் முழு ஒத்துழைப்பு நல்குவேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுவோம்.
தண்ணீர் உண்டு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினாலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனது பதவியேற்பு விழாவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார் குமாரசாமி.