ராகுல் காந்தி, சோனியா காந்தியை அடுத்தடுத்து சந்தித்த குஷ்பு.. பரபரப்பு பின்னணி
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம் தொடர்பாக, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூவை அவர்கள் அழைத்து பேசியது அக்கட்சி வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரசில் கோஷ்டிகள் அதிகம். ஒவ்வொரு கோஷ்டியுமே பலம் வாய்ந்ததாக இருப்பதுதான் மேலிடத்தின் தலைவலிக்கு காரணம்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலதிமுகவோடு கூட்டணி வைத்த காங்கிரஸ், போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே அக்கட்சி கண்ணியத்தை காப்பாற்றியது.
கெடுத்துவிட்ட காங்கிரஸ்
திமுகவை ஆட்சிக்கு வரமுடியாமல் தடுத்ததில் அதிமுகவைவிட காங்கிரசுக்குதான் அதிக பங்கு இருப்பதாக உடன் பிறப்புகள் கமெண்ட் அடிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின், தமிழ் மாநில தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டு பதவி பறிக்கப்பட்டார்.
பொதுவான நபர் தேவை
இந்த சூழ்நிலையில், எந்த கோஷ்டியை சேர்ந்தவர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தாலும், பிறர் அதிருப்தியடையவே செய்வார்கள் என்பதை உணர்ந்துள்ளது காங்கிரஸ் மேலிடம். எனவே தலைவராக ஒரு ஈர்ப்புள்ள நபரை நியமித்துவிட்டு, செயல் தலைவர்களாக ஒன்றிரண்டு பேரை நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.
இளங்கோவனுக்கும் மகிழ்ச்சி
இளங்கோவனுக்கு தீவிர ஆதரவாளரான குஷ்பூவை நியமித்தால், இளங்கோவனின் ஆதரவையும், பிற கோஷ்டி தலைவர்களின் ஆதரவையும் பெற முடியுமா என்று தலைமை வியூகம் அமைத்துள்ளது.
குஷ்புவே போட்டியாளர்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை தேர்தல் பிரசாரங்களில் கடுமையாக குஷ்பூ விமர்சனம் செய்ததும், இதேபோல், அதிமுக கூட்டங்களில் குஷ்பூ மீது அதிமுக பேச்சாளர்கள் தாக்குதலை தொடுத்ததும், சோஷியல் மீடியாவில் குஷ்பு ஆக்டிவாக இருப்பதும், காங்கிரஸ் மேலிடத்திற்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
விளம்பரம் கிடைக்கிறது
திமுக தலைமைக்கு ஆதரவாக உள்ளாட்சி, அடுத்து வரும் லோக்சபா தேர்தல்களில் பணியாற்ற கூடியவராகவும் தலைவராகவும், மீடியாக்களில் அதீத விளம்பரத்தையும், சர்ச்சைக்குறிய பேச்சாற்றலையும் கொண்டவராகவும் குஷ்பூ இருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு போட்டியாக
குஷ்புவை காங்கிரஸ் தலைவராக்குவதன் மூலம், ஜெயலலிதாவுக்கு மாற்றாக பெண்கள் மத்தியில் பாப்புலர் பெண் லீடராக அவரை மாற்றும் முயற்சியை காங்கிரஸ் கையில் எடுக்கலாம் என தெரிகிறது. சிறுபான்மையினர், பெண்களின் வாக்குகளைவும் கவர முடியும் என்றும் வியூகம் வகுக்கப்படுகிறது.
பெண்கள் ராஜ்ஜியம்
அதிமுக தலைமையும், பாஜக மாநிலத் தலைமையும் பெண்ணாக இருப்பதால், இரு கட்சிகளையும் எதிர்க்கக் கூடியவராக குஷ்பூவை நியமித்தால் அருமையாக இருக்கும் என்றும் கட்சி கருதுகிறது. இதன்படி, குஷ்பூ தலைவராகவும், செயல் தலைவர்களாக பிற கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களையும் தேர்வு செய்யப்படலாம்.
பிறருக்கும் வாய்ப்பு
சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் போன்றோரை நியமிக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நியமிப்பதன் வாயிலாக, அனைத்து கோஷ்டி தலைவர்களையும் திருப்திபடுத்த முடியும் என்று கட்சி தலைமை கருதுகிறது.
கட்சி கால்குலேசன்
குஷ்பூ மாநில தலைவராகவும், செயல் தலைவர்களாக கராத்தே தியாகராஜன், பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் நியமிக்கப்படலாம் என்றும் மாநிலத் தலைமையை வழிநடத்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, அதில் அனைத்து முன்னாள் தலைவர்களும், மூத்த தலைவர்களும் நியமித்து, இந்த குழுவின் பேரில் மாநில தலைவர் செயல்பட கட்சி தலைமை அறிவுறுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.