திருமலையில் கருட சேவை: 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்! 25 மணி நேரம் காத்திருப்பு!!
திருமலை: திருமலைக் கோயிலில் வருடாந்திர பிரம்மோத்ஸவத்தையொட்டி நேற்று இரவு நடைபெற்ற கருட வாகன சேவை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மலையப்ப ஸ்வாமியை தரிசித்தனர்.
திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோத்ஸ்வம் நடைபெற்று வருகிறது. கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோத்ஸவத்தின் 4-ஆம் நாளான திங்கட்கிழமை ஏழுமலையானை 76,033 பேர் தரிசித்தனர். 49,882 பக்தர்கள் ஏழுமலையானுக்கு தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

உண்டியல் வருமானம்
கோயிலுக்கு உண்டியல் மூலம் ரூ.2.19 கோடி, ஆர்ஜித சேவைகளின் மூலம் ரூ.54,400, பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ.38,69,075, வாடகை அறைகளின் மூலம் ரூ14,60,050 என ஒரே நாளில் ரூ.2.73 கோடி வருவாய் கிடைத்தது.

மோகினி அவதாரம்
இந்த விழாவின் 5-ஆம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை, மோகினி அவதாரத்தில் சுவாமி மாட வீதிகளில் சுவாமி வலம் வந்தார்.

ஆண்டாள் சூடிய மாலை
இதையொட்டி, திருவில்லிப்புத்தூரிலிருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளிகள், மலர்ஜடை ஆகியவற்றை அணிந்து கொண்டு கோபால கிருஷ்ணன் உடன் வர மோகினி அவதாரத்தில் தாயார் போல் மலையப்ப ஸ்வாமி காட்சியளித்தார். பின்னர், மாட வீதியில் ஸ்வாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருடசேவை தரிசனம்
பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நேற்று இரவு நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.

தங்க வைர ஆபரணங்கள்
கருட வாகனத்தில், மூலவரான ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் 32 கிலோ எடையுள்ள (1,008) ஸஹஸ்ர காசுமாலை, மகரக்கண்டி, லக்ஷ்மி ஆரம், பல வகையான வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், பவளம், முத்துக்கள் ஆகியவற்றாலான பல கோடி மதிப்புள்ள ஆபரணங்கள், பலவித நறுமண மலர்களால் ஆன மாலைகள் மலையப்ப ஸ்வாமிக்கு அணிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, நான்கு மாட வீதிகளில் மலையப்ப ஸ்வாமி வலம் வந்தார்.

திருக்குடைகள்
இதில், சென்னையிலிருந்து பாதயாத்திரையாக கொண்டு வரப்பட்ட திருக்குடைகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது, அங்கு திரண்டிருந்த சுமார் 5 லட்சம் பக்தர்கள் கருட சேவையைக் கண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

25 மணி நேரம் காத்திருப்பு
ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தர்ம தரிசனத்தில் 25 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் 17 மணிநேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கருட சேவையை முன்னிட்டு நடைபாதை பக்தர்களுக்கான திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குதல் நிறுத்தப்பட்டது. மற்ற தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏழுமலையானை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே கடும் நெருக்கடி ஏற்பட்டது.

கொட்டும் மழையில்
இதனிடையே, செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்ததால், கேலரிகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் மழையில் நனைந்தனர். கருட சேவையை முன்னிட்டு சுமார் 3,000 கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாடவீதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications