பீகார் தேர்தல்: திராணி இருந்தா முதல்வர் வேட்பாளரை அறிவியுங்க.. பாஜகவை வெளுக்கும் லாலு!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாரதிய ஜனதா கட்சி அறிவிக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன. இக்கூட்டணியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக முதல்வர் நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் நேற்று தமது 68வது பிறந்த நாளை பாட்னாவில் நேற்று கொண்டாடினார். அப்போது லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவித்திருக்கிறோம். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நிதிஷ் சில கால எங்களை விட்டு விலகி இருந்தார். இதனால் மதவாத சக்திகள் லாபமடைந்தனர். ஆனால் தற்போது நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்துள்ளோம். நாங்கள் நிச்சயம் பாரதிய ஜனதாவை வீழ்த்துவோம்.
பீகார் சட்டசபை தேர்தல் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மறக்க முடியாத போர்க்களமாக இருக்கும். எங்களைப் போலவே தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் எந்த ஒரு அரசியல் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications