பாஜகவை ஆதரிப்பீர்களா?.. "என்னப்பத்தி தெரியாம இப்படி கேட்டா..." நிருபர் மீது பாய்ந்த லாலு!
பாட்னா: நீங்கள் எப்போது பிறந்தீர்கள்.. எனது அரசியல் பின்புலத்தை தெரியாமல் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்ககூடாது என்று பத்திரிகையாளர் மீது கடுமையாக சாடினார் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்.
பொத்துக்கொண்டுவந்தது
பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்திய லாலுவிடம், பிற கட்சிகள் எல்லாம் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறிவருகின்றனவே, நீங்களும் ஆதரவு அளிக்க முன் வருவீர்களா என்று கேட்டார். அவ்வளவுதான் லாலுவுக்கு எங்கிருந்துதான் கோபம் பொத்துக்கொண்டு வந்ததோ தெரியவில்லை. கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஹிந்தியிலேயே திட்டி வாட்டி எடுத்துவிட்டார்.
இது என்ன மெட்டல் தெரியுமா?
என் அரசியல் வரலாறு தெரியுமா உனக்கு.. எந்த வருஷத்தில நீ பொறந்தே.. எனது அரசியல் பின்புலத்தை பற்றி தெரியாமல் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டே இருக்க கூடாது. நான் எந்த மெட்டலால் உருவாக்கப்பட்டவன் தெரியுமா? நிதிஷ்குமார் (பிகார் முதல்வர்), ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் உருவான மெட்டலால் நான் உருவாக்கப்படவில்லை" என்று வேகவேகமாக கொட்டித் தீர்த்துவிட்டார். மெட்டல் என்பது மட்டுமே அவர் பேசியதில் ஆங்கில வார்த்தை. பிற அனைத்தும் ஹிந்திதான். கேள்வி கேட்ட நிருபர் தலை கிறுகிறுக்க ஆரம்பித்துவிட்டது.
பாஜகவின் பசி
மேலும் அவர் தனது பேட்டியில் கூறியதாவது: இந்திய வரலாற்றில் முதன் முறையாக தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இப்போதுதான் பார்க்கிறேன். பாஜகவின் அந்த அளவுக்கு அதிகார பசி உள்ளது.
எக்ஸிட் போல் சதி
எக்ஸிட் போல் என்பது திட்டமிட்ட பொய். வாக்கு எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவும், பிற கட்சி ஏஜென்டுகள் தன்னம்பிக்கையை குலைக்கவும்தான் இதுபோல எக்சிட் போல் வெளியிடப்பட்டுள்ளது. இதை நம்பிக்கொண்டு ராஷ்டிரிய ஜனதாதள கட்சி ஏஜென்டுகள் வாக்கு எண்ணிக்கையின்போது மெத்தனமாக இருந்துவிட கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
பொறுத்திருந்து பாருங்கள்....
நாம்தான் ஜெயிக்கப் போவதில்லையே என்று நினைத்துக் கொண்டு, வாக்குச் எண்ணும் மையங்களை விட்டு நமது ஏஜென்டுகள் வேறு எங்கும் சென்றுவிட வேண்டாம். நான் எக்ஸிட் போல் தயவால் அரசியல் நடத்தவில்லை. 16ம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.