மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: ராஞ்சி சிபிஐ கோர்ட்டில் லாலு ஆஜர்
ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
பீகார் மாநிலத்தில் 1990-1997ஆம் ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கியதில் ரூ950 கோடி ஊழல் நடைபெற்றது என புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் லாலு பிரசாத் யாதவ் மீதான ரூ37 கோடி முறைகேடு வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ் உட்பட 44 பேருக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013-ம் ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. தற்போது லாலு பிரசாத் ஜாமீனில் உள்ளார்.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து லாலுபிரசாத் யாதவ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெற்று வந்த விசாரணையின் போது குற்றவாளிகள் பலரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து லாலு பிரசாத் உட்பட குற்றவாளிகளான 44 பேரும் இன்று கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் லாலு பிரசாத் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.