நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்- அ.தி.மு.க. ஆதரவு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. இம்மசோதா நிறைவேற அண்ணா தி.மு.க. ஆதரவளித்தது. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தில், முக்கிய துறைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகளின் சம்மதம் பெற தேவையில்லை என்பது உள்ளிட்ட அம்சங்களை சேர்த்து பாரதிய ஜனதா கூட்டணி அரசு கடந்த ஜனவரி மாதம் அவசர சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தியது.
இந்த சட்டத்துக்கு மாற்றாக, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான மசோதா, லோக்சபாவில் ‘நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படையான தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் (திருத்தம்) மசோதா-2015' என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டது.
இம் மசோதா, ‘விவசாயிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது' என கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. அதைத் தொடர்ந்து மசோதாவில் குறைகள் இருப்பதாக கருதினால், திருத்தங்கள் செய்யத்தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இம் மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் தொடங்கியது. நேற்று 2-வது நாள் விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக மூத்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, வீரேந்தர் சிங் ஆகியோர் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சி தலைவர்களிடையே பேசினர்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றியும், அதில் கூட்டணி கட்சிகளின் கவலையை புரிந்து கொண்டு மசோதாவில் கொண்டு வரவுள்ள திருத்தங்கள் குறித்தும் எடுத்துக்கூறி, மசோதாவுக்கு ஒருமித்த ஆதரவை பெற நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து லோக்சபாவில் மசோதா மீது 2-வது நாளாக விவாதம் நடந்தது. எம்.பி.க்கள் காரசாரமாக விவாதித்தனர். நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் சம்மதம் பெறுவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கேட்டுக்கொண்டது.
ஏழை, எளியோர், விவசாயிகளின் உரிமைகள் நசுக்கப்படாதவாறு, கூடுதலான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும் என முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவருமான தேவேகவுடா வலியுறுத்தினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ, ஜனநாயகத்தை கவிழ்க்கிற வகையில் இந்த மசோதாவை அரசு கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாகவும், இந்த மசோதா ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் கொண்டு வந்திருப்பதாகவும் அந்த கட்சி கூறியது.
2 நாட்களாக நடந்து வந்த விவாதத்தை தொடர்ந்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வீரேந்தர் சிங் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை விளக்கினார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் சில கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தும் வகையில் மசோதாவில் அரசு தரப்பில் 9 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 2 உட்பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 52 திருத்தங்களை கொண்டு வந்தனர். அவற்றின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் நிலம் கையகப்படுத்தப்படும்போது நிலம் வழங்கியவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற விதியை சேர்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்கெடுப்பில் அரசு தரப்பில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் நிறைவேறின. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு வந்த திருத்தங்கள் முறியடிக்கப்பட்டன.
இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது. மசோதாவை பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா தவிர்த்த பிற கூட்டணி கட்சிகளோடு எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆதரித்தது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை வெளிநடப்பு செய்தன.
லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேற வேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அங்கு போதுமான பலம் இல்லை என்பதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது. அங்கு மசோதா தோற்கடிக்கப்படுகிற பட்சத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டி மசோதாவை நிறைவேற்றி விட முடியும்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறுவதில் ஆர்வமும், தீவிரமும் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது சபையில் இல்லை. அவர் 3 நாடுகள் சுற்றுப்பயணத்துக்காக புறப்பட்டு சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications