மணிப்பூரில் கனமழை... நிலச்சரிவுக்கு 21 பேர் பலி
இம்பால்: மணிப்பூரில் மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுக்கு 21 பேர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதனைச் சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்பால் கிழக்கு மாவட்டம் ஜிரிபம் பகுதியில் உள்ள ஜிரி ஆறு நிரம்பி வழிகிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே மணிப்பூர் - மியான்மர் எல்லையை ஒட்டியப் பகுதியான கென்ஜாய் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கென்ஞ்சாயில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.