நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பிறப்பிக்காதது பின்னடைவு அல்ல... முன்னேற்றமே.. அருண்ஜெட்லீ
டெல்லி : நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்த அவசர சட்டம் பிறப்பிக்காதது மத்திய அரசுக்கு பின்னடைவு அல்ல என்றும், இது முன்னேற்றமே எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "குடியரசுத் தலைவர் பிறப்பித்திருந்த அவசர சட்டம் காலாவதியாகும் நிலையில் அதை புதுப்பிக்க அரசு முயலவில்லை. இதற்கு மாற்று வழியை அரசு பின்பற்றும்.
மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இந்த மசோதாவில் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்ய அரசு தயாராக உள்ளது.
இது நிச்சயம் பின்னடைவு அல்ல. இந்த மசோதாவால் அரசியல் ரீதியில் முடக்கம் ஏற்படுவதற்கு பதிலாக மாற்று யோசனை மூலம் இதைக் கையாள முடிவு செய்துள்ளோம். அந்த வகையில் இது முன்னேற்றமே" என்றார்.
முன்னதாக, பிரதமர் நரேந்த மோடி நேற்று முன்தினம் பேசும் போது, , நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர அரசு முயலாது என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசர சட்டம் நேற்றுடன் காலாவதியானது குறிப்பிடத்தக்கது.