கன்று குட்டியை கொன்று மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகே போட்ட சிறுத்தை
மைசூரை அடுத்த சாமுண்டீ மலையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடாந்திரம் நடைபெறும் தசரா உலக பிரசித்தி பெற்றது. இப்போதிருந்தே தசரா விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் சாமுண்டி மலையில் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சாமுண்டி மலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பசு, நாய் ஆகியவற்றை கொன்றிருந்த சிறுத்தை, நேற்று நள்ளிரவில் பசு கன்று குட்டியை கொன்று சாப்பிட்டுவிட்டு முக்கால்வாசி உடலை கோயில் அருகே போட்டுவிட்டு சென்றுள்ளது. காலையில் கோயிலின் அருகே கடை வைத்துள்ளோர் வந்து பார்த்தபோது அதிர்சியடைந்தனர்.
கோயிலை சுற்றிலும் சுமார் நூறு வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களும் இந்த சம்பவத்தால் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் வந்து கன்று உடலை எடுத்துச் சென்றுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளதால் சிறுத்தையை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.