பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்திற்கு அழைத்தும் வராமல் புறக்கணித்த அத்வானி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி அழைக்கப்பட்டும் வராமல் புறக்கணித்து விட்டார்.
மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று அத்வானி போர்க்கொடி தூக்கினார். அவரது அணியில் சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, உமாபாரதி என பெருந் தலைகள் இருந்தனர்.
ஆனால் தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அத்வானியைத் தவிர அனைவருமே பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மேற்கொள்ளும் முடிவை ஏற்பதாக அறிவித்தனர்.
அத்வானியின் தீவிர சிஷ்யையான சுஷ்மா ஸ்வராஜும் முரளி மனோகர் ஜோஷியும் கூட தங்களை சந்தித்த ராஜ்நாத்சிங்கிடம் இதை தெளிவாக சொல்லிவிட்டனர். தற்போது ராஜ்நாத்சிங் எடுக்கும் முடிவை ஆதரிப்போம் என்று உமாபாரதியும் கூறிவிட்டார்.
அத்வானிக்கான ஒரே ஒரு ஆதரவாளராக இருந்தவர் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான் மட்டுமே. அத்வானி தொடர்ந்தும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று மாலை நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். இருப்பினும் அத்வானி வராமல் இருந்து விட்டார்.
முன்னதாக இந்தக் கூட்டம் குறித்து தனக்கு தகவல் ஏதும் வரவில்லை என்று அத்வானி இன்று காலையில் கூறியிருந்தார்.
பின்னர் கூட்டத்தில் பங்கேற்பதாகக் கூறிவிட்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடிக்கு அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அத்வானியை நேற்று முன்தினமும், சுஷ்மா ஸ்வராஜை நேற்றும் ராஜ்நாத் சந்தித்துப் பேசினார். நேற்றைய சந்திப்பின் போது அத்வானியின் ஒப்புதல் இன்றி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று சுஷ்மா சுவராஜ் கூறினார். ஆனால் பின்னர் அவர் சமாதானப்படுத்தப்பட்டார்.