Exit Poll: ஆந்திராவில் 'ஜெகன் அண்ணா' செய்த அந்த ஒரு ஒரே 'சம்பவம்'- ஒட்டுமொத்த ஸ்டேட்டே தலைகீழானதாம்!
அமராவது: ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என எக்ஸிட் போல் முடிவுகள் கணித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என கணித்திருந்தன.

தற்போது லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளில் ஆந்திராவில் பெரும்பாலான தொகுதிகளை தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக கூட்டணிதான் கைப்பற்றும்; ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 2 முதல் 4 இடங்கள்தான் கிடைக்கும் என்கிற அதிர்ச்சி தரும் கணிப்பை வெளியிட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 13 முதல் 15 இடங்களையும் பாஜக 4 முதல் 6 இடங்களையும் ஆந்திராவில் கைப்பற்றும் என்கின்றன இந்த எக்ஸிட் போல் முடிவுகள். 2019-ல் ஒரு இடத்தில் கூட வெல்லாத பாஜக, போட்டியிட்ட 6 இடங்களிலும் ஆந்திராவில் வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்கிற எக்ஸிட் போல் முடிவுகள் ஆச்சரியத்தைத் தரக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர்கள், ஆந்திராவில் கள நிலவரம் மாறியிருந்தாலும் ஆச்சரியப்படத் தேவை இல்லை. ஏனெனில் தமக்கு சாதகமாக இருந்த களத்தை தாமே மாற்றி அமைத்தவர்தான் ஜெகன் மோகன் ரெட்டி. அதுதான் சந்திரபாபு நாயுடு கைது சம்பவம் என்கின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக திடீரென சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி. இது சந்திரபாபு நாயுடுவை பாஜக கூட்டணியில் இணைய வைத்துவிட்ட ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. அத்துடன் சந்திரபாபு நாயுடு மீது பெரும் அனுதாப அலையையும் உருவாக்கிவிட்டது. இந்த கைது நடவடிக்கையை ஜெகன் மோகன் ரெட்டி தவிர்த்திருந்தால் அவரை யாராலும் அசைத்திருக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர் மூத்த பத்திரிகையாளர்கள். இந்த கருத்துகள் உண்மையா? பொய்யா? என்பது ஜூன் 4-ந் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications