மோடி அலை முதலில் ஒர்க்அவுட் ஆன இடம்! ஆனாலும் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மம்தா! அசன்சோல் கள நிலவரம் என்ன
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அசன்சோல் தொகுதி திடீரென போராட்ட களமாக மாறி இருக்கிறது. அந்த தொகுதி ஏன் முக்கியம்.. தற்போது அங்கே கள நிலவரம் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
லோக்சபாவுக்கு அதிக எம்பிக்களை அனுப்பும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று.. இங்கிருந்து 42 எம்பிக்கள் செல்கிறார்கள். இந்த முறை இங்கே திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இந்தியா கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது.

அப்படி மேற்கு வங்கத்தில் இருக்கும் மிக முக்கியமான ஒரு தொகுதி தான் அசன்சோல். அங்கே பல முனை போட்டி நிலவுவதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கிறது..
அசன்சோல்: மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். ஜார்க்கண்ட் எல்லையில் அமைந்துள்ள இந்த நகரம் நிலக்கரி சுரங்கம் மற்றும் ரயில்வே துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அசன்சோல் லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை அங்கே நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். குறிப்பாக நிலக்கரி தொழிலாளர்கள் தான் இங்கே அதிகம். அதேநேரம் நிலக்கரி மாபியா பிரச்சினையும் இருக்கிறது.
இந்த அசன்சோல் தொகுதியில் 75% மக்கள் இந்துக்கள் ஆகும். 21% மக்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். வங்காள மொழி பேசும் மேற்கு வங்கத்தில் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். அங்கு உள்ள வாக்காளர்களில் சுமார் 30% மேல் இந்தி பேசும் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல்கள்: 1957ஆம் ஆண்டு முதலே உள்ள பாரம்பரிய தொகுதிகளில் ஒன்றாகும். தொடக்கத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தினாலும் 1970களில் இருந்தே இங்கு சிபிஎம் ஆதிக்கம் தொடர்ந்தது. அதிலும் குறிப்பாக 1989க்கு பிறகு சுமார் 25 ஆண்டுகள் இந்த தொகுதி சிபிஎம் வசமே இருந்தது. காங்கிரஸ் கட்சியால் இங்கு வெல்லவே முடியாமல் இருந்தது. ஆனால், கடந்த 2014இல் நிலைமை மொத்தமாக மாறியது.
மோடி அலை: நாடு முழுக்க வீசிய மோடி அலை மேற்கு வங்கத்தில் வீசவில்லை. அங்குள்ள 42 சீட்களில் திரிணாமுல் அதிகபட்சமாக 34 இடங்களைக் கைப்பற்றியது. அந்தளவுக்கு மம்தா அலை அங்கே வீசியது. இருப்பினும், அதையும் தாண்டி பாஜக 2 இடங்களில் அந்தத் தேர்தலில் வென்றது. மம்தா அவ்வளவு வலிமையாக இருந்த போதே பாஜக வென்ற இடங்களில் அதுவும் ஒன்று. பாஜக சார்பில் போட்டியிட்ட பிரபல பின்னணி பாடகர் பாபுல் சுப்ரியோ 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
தொடர்ந்து 2019ஆம் ஆண்டிலும் அவரே போட்டியிட்ட நிலையில், இந்த முறை அவர் 1.97 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இப்படி இரண்டு முறை பாஜக சார்பில் வென்ற பாபுல் சுப்ரியோ, மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். இருப்பினும், கடந்த 2021இல் அவர் திடீரென திரிணாமுல் கட்சிக்குத் தாவினார். மேற்கு வங்க சட்டசபைக்குத் தேர்வான அவர் இப்போது மேற்கு வங்க அரசில் கேபினட் அமைச்சராக இருக்கிறார்.
ட்விஸ்ட்: அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து 2022இல் அசன்சோல் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் திரிணாமுல் சார்பில் போட்டியிட்ட மூத்த அரசியல்வாதி சத்ருகன் சின்ஹா சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஜகவின் அக்னிமித்ர பால் படுதோல்வி அடைந்தார்.
இந்த முறை திரிணாமுல் கட்சி மீண்டும் சத்ருகன் சின்ஹாவுக்கு வாய்ப்பு கொடுத்தது. பாஜக சார்பில் பிரபல பாடகர் பவன் சிங் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மேற்கு வங்கத்துப் பெண்கள் குறித்து ஆபாசமான பாடல்களைப் பாடியதாகச் சர்ச்சை எழுந்த நிலையில், அவர் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதையடுத்து அங்கே பாஜக சார்பில் ஐடி துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடும் போட்டி: அதேபோல காங்கிரஸ் சார்பில் ஜஹானாரா கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று பேரும் வலுவான வேட்பாளர்கள் என்பதால் அங்கே கடுமையான போட்டி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் இந்த அசன்சோல் தொகுதிக்கு 4ஆம் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications