சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன... கடவுள் கிருஷ்ணன் அருள்புரிவார்: டுவிட்டரில் சுஷ்மா
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறுநீரக கோளாறால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் சுஷ்மா சுவராஜுக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த சுஷ்மாவிற்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது டயாலிசிஸ் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா சுவராஜ், சிறுநீரகக் கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். கடவுள் கிருஷ்ணா அருள்புரிவார் என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
I am in AIIMS because of kidney failure. Presently, I am on dialysis. I am undergoing tests for a Kidney transplant. Lord Krishna will bless
— Sushma Swaraj (@SushmaSwaraj) November 16, 2016
கடந்த 20 ஆண்டுகாலமாக சுஷ்மா சுவராஜ் சர்க்கரை நோய்க்கு மருந்து உட்கொண்டு வருகிறார். நீரிழிவு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக சுஷ்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவது வாடிக்கை.
கடந்த ஏப்ரல் மாதம் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜ் சிகிச்சைப் பெற்றார். இதேபோல் கடந்த அக்டோபர் 25ம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதால் விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளத குறிப்பிடத்தக்கது.