காதலுக்கு எல்லை கிடையாது.. அனைத்துமே லவ் ஜிஹாத் அல்ல: கேரளா ஹைகோர்ட் அதிரடி
காதலுக்கு எல்லை எதுவும் கிடையாது; அனைத்தையுமே லவ் ஜிஹாத்தாக பார்க்கவும் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: காதலுக்கு எல்லை என்பதே கிடையாது.. அனைத்து காதலுமே லவ் ஜிஹாத் அல்ல அதிரடியாக கூறியுள்ளது கேரளா உயர்நீதிமன்றம்.
கண்ணூரைச் சேர்ந்த அனீஸ் ஹமீத் என்பவரும் ஸ்ருதி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஸ்ருதியின் பெற்றோரோ, அனீஸ் கடத்திச் சென்று அவரை மதம் மாற்றியதாக போலீசில் புகார்கொடுத்தனர்.
அதேநேரத்தில் மனைவி ஸ்ருதியை அவரது குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்டுத் தரக் கோரி ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை அனீஸ் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சிதம்பரேஸ் மற்றும் சதீஷ் நினான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
மதம் மாற வற்புறுத்தவில்லை
அப்போது விசாரணைக்கு அனீஸ், ஸ்ருதி இருவருமே ஆஜராகினர். இந்த விசாரணையின் போது ஸ்ருதி, என்னை மதம் மாற யாரும் வற்புறுத்தவில்லை; அனீஸை திருமணம் செய்யத்தான் மதம் மாறினேன் என கூறினார்.
வன்முறை ஏவ கூடாது
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: கேரளாவில் ஒவ்வொரு காதலையுமே அல்லது கலப்பு திருமணத்தையுமே லவ் ஜிஹாத் என்பதும் கார் வாப்ஸி என்பதுமான ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. கலப்பு திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களும் இளம்பெண்களும் அச்சுறுத்தப்படுவதும் அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படுவதுமான செய்திகள் வருத்தத்தைத் தருகின்றன.
மேஜரானவர்களுக்கு உரிமை உண்டு
கலப்பு திருமணம் செய்வோர் மீது வன்முறையை ஏவுவோர் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நமது நாடு ஜனநாயக நாடு. இங்கு ஒருவர் மேஜராகிவிட்டால் அவர்கள் விரும்பும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
வன்முறை கூடாது
அப்படி கலப்பு திருமணம் செய்து கொள்வதை அந்த பையன் அல்லது பெண்ணின் விரும்பவில்லை எனில் மகன் அல்லது மகளுடனான சமூக உறவை வேண்டுமானால் நீங்கள் துண்டித்துக் கொள்ளலாம். அதற்காக அவர்களை அச்சுறுத்துவதும் வன்முறையை ஏவுவதும் ஏற்க முடியாதது.
காதலுக்கு எல்லைகள் கிடையாது
தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் நாம். சட்டவிரோதமாக ஒரு பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்தால் அதில் தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். காதலுக்கு எல்லைகள் எதுவுமே கிடையாது.. அது அத்தனைகளையும் தடைகளையும் வேலிகளையும் தாண்டி முழுமையாக நம்பிக்கையை உள்ளடக்கியது. இந்த வழக்கில் ஸ்ருதியின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். அவரது பெற்றோரின் தவறான தகவல்களை முறியடித்து உண்மையை நிலைநாட்டியுள்ளார்.