லக்னோ ஜூவில் நடுங்கும் விலங்குகள்: ஹீட்டர் போட்டு சூடேற்றும் நிர்வாகம்
லக்னோ: லக்னோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் இருக்கும் விலங்குகள் குளிரில் வாடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் குளிராக உள்ளது. அதிலும் டெல்லியில் கடுங்குளிராக உள்ளது. டெல்லியில் இன்று காலை குறைந்தபட்ச வெட்பநிலை 4 டிகிரி செல்சியஸாக இருந்தது.

வட இந்தியாவில் நிலவும் கடுங்குளிர், பனிமூட்டத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி வருகின்றனர். பனிமூட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மனிதர்கள் குளிரை தாங்க முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை குளிரில் இருந்து காக்கத் தேவையான நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது.
விலங்குகள் உள்ள அறைகள் ஹீட்டர் மூலம் சூடாக்கப்படுகிறது. மேலும் தீ மூட்டியும் சூடு ஏற்றப்படுகிறது. குளிர் காலத்தில் தாக்குப்பிடிக்க விலங்குகளுக்கு சிறப்பு வைட்டமின் மாத்திரைகளும், சத்தான உணவுகளும் அளிக்கப்படுகிறது.
விலங்கியல் பூங்காவில் உள்ள பல வகை பாம்புகள் குளிர் காலம் என்பதால் தூங்கி வருகின்றன. அவை குளிர்காலம் முடியும் வரை எழாமல் தூங்கும். பாம்புகளின் உடலில் சூடு தானாக ஏற்படாது என்பதால் அவை உள்ள அறைகளில் மண் பானையில் 100 வாட் பல்ப் எரிய வைக்கப்பட்டுள்ளது. பாம்புகள் இருக்கும் அறைகளின் தரையில் சாக்குப்பை விரிக்கப்பட்டுள்ளது.
குரங்குகளுக்கு முட்டையும், கடலையும் அளிக்கப்படுகிறது. சில விலங்குகள் போர்வையால் போர்த்தி வைக்கப்படுகிறது. யானைகளுக்கு கரும்பும், மான்களுக்கு கரும்பு இலையும் உணவாக அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications