ராகுலுக்கு ஆதரவு.. யாத்திரையில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர்.. பாஜக அரசின் அதிரடி தண்டனையை பாருங்க!
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அரசு பள்ளி ஆசிரியர் பங்கேற்ற நிலையில் அந்த மாநில அரசு அவருக்கு அதிரடியாக தண்டனை வழங்கி உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தற்போது செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் யாத்திரை
ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை துவங்கினார். இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. தற்போது இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை கடந்து மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது.
பெருகும் ஆதரவு
மத்திய பிரதேசத்துக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்கள் திக் விஜய் சிங், கமல்நாத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தினமும் ஏராளமான தொண்டர்கள் ராகுல் காந்தியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அக்கட்சி தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த மாதம் 25ம் தேதி பர்வானி மாவட்டத்தில் நடந்தது.
அரசு பள்ளி ஆசிரியர் பங்கேற்பு
இந்த யாத்திரையில் கனசியா பகுதியில் உள்ள பழங்குடியினர் விவகாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு தொடக்க பள்ளியின் ஆசிரியர் ராஜேஷ் கனோஜி பங்கேற்றார். இதுதொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இது சர்ச்சையை கிளப்பியது. இவர் மீது துறை அதிகாரிகளிடம் புகார்கள் செய்யப்பட்டன. அரசு பள்ளியில் பணியாற்றி கட்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் ராஜோஸ் கனோஜி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.
அதிகாரி கூறுவது என்ன?
இந்நிலையில் தான் ஆசிரியர் ராஜேஷ் கனோஜியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி பழங்குடியினர் விவகாரத்துறை உதவி கமிஷனர் என்எஸ் ரகுவன்சி கூறுகையில், ‛‛முக்கியமான வேலை இருப்பதாக கூறி ஆசிரியர் ராஜேஷ் விடுப்பு கேட்டு இருந்தார். ஆனால் நடத்தை விதிகளை மீறி அரசியல் ஊர்வலத்தில் ராஜேஷ் பங்கேற்றுள்ளார். இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.
காங்கிரஸ் விமர்சனம்
இதற்கிடையே இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கேகே மிஸ்ரா தனது ட்விட்டர் பதிவில், ‛‛மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்யும் பாஜகவின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதித்துள்ளது. ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கனோஜ் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்டதா கூறி சஸ்பெண்ட் செய்துள்ளார்'' என குற்றம்சாட்டி உள்ளார்.