"ஜெயிச்சாகணும்".. இல்லாட்டி மானக்கேடு.. பெரும் நெருக்கடியில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா
பெரும் நெருக்கடியில் ஜோதிர் ஆதித்யா சிந்தியா சிக்கி உள்ளார்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இல்லாவிட்டால் ஆட்சி பறி போய் விடும். அதை விட முக்கியம் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு மானக்கேடாகிப் போய் விடும்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் வென்று ஆட்சியமைத்தது. ஆனால் திடீரென ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்த புரட்சியால் ஆட்சி கவிழ்ந்தது. பாஜக பக்கம் சிந்தியா போனதால் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். மீண்டும் முதல்வர் ஆனார் சிவராஜ் சிங் செளகான்.
இந்த கட்சி தாவலைத் தொடர்ந்து சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரின் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் 6 தொகுதிகளை சேர்த்து மொத்தம் 28 தொகுதிகளுக்கு அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
பாஜக
இங்குதான் தற்போது ஒரு சிக்கல் வந்துள்ளது... அதாவது இந்த 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றால் பாஜக ஆட்சி கவிழும்... அது நடக்காமல் போனால் பாஜக தப்பி விடும். இங்குதான் சிந்தியாவுக்கு ஒரு கெளரவப் பிரச்சினை காத்திருக்கிறது... தனது ஆதரவு எம்எல்ஏக்களால் காலியான அத்தனை இடத்திலும் பாஜக வென்றாக வேண்டும். இல்லாவிட்டால் சிந்தியாவுக்கு மானக்கேடாகி விடும்.
கோட்டை
இந்த 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் குவாலியர், சம்பல் பிராந்தியத்தில் வருகின்றன. இவையெல்லாம் சிந்தியா குடும்பத்து கோட்டையாகும். எனவே இங்கெல்லாம் பாஜக வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல்நாத் பேசிய ஐட்டம் என்ற அசிங்கமான பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது.
தேர்தல் ஆணையம்
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், கமல்நாத்தை நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்திலிருந்து நீக்கியது. ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து விட்டது... இதற்கிடையே,இந்த தேர்தல் முடிவால் பாஜகவுக்கு ஆபத்து ஏதும் இல்லை.. ஒரு வேளை காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் வென்றால்தான் பாஜகவுக்கு ஆபத்து வரும்.
சிந்தியா
அதேசமயம், 28 தொகுதிகளிலும் பாஜக வென்று விட்டால், அது ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு சாதகமாகும். அவர் முதல்வர் பதவி கூட கேட்டு பாஜகவை நெருக்கலாம்... மாறாக பெரும் தோல்வியை பாஜக தழுவினால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் அபாயமும் உள்ளதை மறுப்பதற்கில்லை.
நெருக்கடி
இடைத் தேர்தலில் 9 இடங்களில் வென்றால் பாஜகவுக்கு சாதாரண பெரும்பான்மை பலம் கிடைத்து விடும். தற்போது அதற்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் ஆட்சியை நடத்தி வருகிறது என்பது நினைவிருக்கலாம். எனவே இந்த இடைத் தேர்தல் மூலம் பெரும்பான்மை பலம் பெற்று விட பாஜக ஆர்வமாக உள்ளது. அதேசமயம், ஆட்சியைக் கவிழ்க்க இதை நல்ல சந்தர்ப்பமாக காங்கிரஸ் எடுத்துள்ளது.