கணவரை பிரிந்து பிடித்தவரோடு வாழ்ந்த பெண்.. தோளில் சுமந்தபடி 3 கி.மீ.. சித்ரவதையின் உச்சம்
மத்திய பிரதேசம்: பழங்குடியின பெண்ணை அவருடைய கணவரின் உறவினர் ஒருவர் தோள்பட்டையில் சுமந்தபடி நடக்க வைத்து துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமாக பேசி பிரிந்துள்ளனர். அதன்பிறகு, அந்த பெண் தனக்கு பிடித்த மற்றொரு நபருடன் இணைந்து அருகில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் அப்பெண்ணின் முன்னாள் கணவரின் குடும்பத்தினர், அவரது வீட்டுக்குள் நுழைந்து, பலவந்தமாக வெளியேற்றி, கணவனின் உறவினர் ஒருவரை தோள்பட்டையில் சுமக்க வைத்து 3 கிலோ மீட்டருக்கு நடக்கச் செய்து துன்புறுத்தியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பெண் நடந்து செல்லும் போது, கம்பு, தடி போன்றவற்றை கொண்டு அவரை அடிப்பதும், அதை கொண்டாடுவதும் என்று ஒரு கூட்டமே பின்தொடர்ந்து நடந்து செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜுலை மாதமும் இதே போன்று மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.