மகாராஷ்டிரா: இந்தி அல்ல- மராத்திதான் கட்டாயம்- பட்னாவிஸ் அறிவிப்பு-தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையின் கீழ் இந்தி மொழி கட்டாயப் பாடம் அல்ல; மராத்தி மொழிதான் கட்டாயம் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்புக்கு இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. இந்த மும்மொழிக் கொள்கையின் கீழ் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயமாக திணிக்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு.

இதனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்தது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க மறுத்து வருகிறது.
இந்த பின்னணியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய கல்வி கொள்கையின் கீழ் தொடக்கப் பள்ளிகளிலும் இந்தி மொழி 3-வது மொழியாக கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது மகாராஷ்டிராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவிலும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக் குரல்கள் மையம் கொண்டன.
இதனால் அச்சப்பட்ட மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி மொழி கட்டாயம் அல்ல; மராத்தி மொழிதான் கட்டாயம். ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் இந்தி படிக்க விரும்பினால்தான் இந்தி கற்பிக்கப்படும். அதேபோல தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் கற்பிக்கப்படும். இந்த மொழிகளைத் தவிர பிற மொழிகளைக் கற்பிக்க போதுமான ஆசிரியர்களும் இல்லை என அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், மகாராஷ்டிராவில் இந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பின் காரணமாக தற்போது மராத்தி மொழிதான் கட்டாயம் என்கிறார் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழியைத் திணித்ததன் விளைவுதான் இத்தகைய எதிர்ப்பும் அறிவிப்பும்.
இனியேனும் பிரதமர் மோடியும் மத்திய கல்வி அமைச்சரும், இந்தி மொழி திணிப்பு குறித்து விளக்கம் தர வேண்டும்; புதிய கல்வி கொள்கையின் கீழ் 3-வது மொழியாக இந்தி மொழி கட்டாயம் அல்ல என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா? தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா? எனவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications