அமித்ஷாவை பார்த்து காந்தியே சிரிப்பார்... காந்தியின் பேரன் பதிலடி
புத்திசாலி வணிகர் என்று காந்தியை விமர்சனம் செய்த அமித்ஷாவை பார்த்து காந்தியே சிரிப்பார் என்று காந்தியின் பேரன் தெரிவித்தார்.
ராய்ப்பூர்: புத்திசாலி வணிகர் என்று காந்தியை விமர்சனம் செய்த அமித்ஷாவை பார்த்து காந்தியே சிரிப்பார் என்று காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜத தலைவர் அமித்ஷா நேற்று பேசிய போது காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது காந்தியை புத்திசாலி வணிகர் என்றார். குஜராத்தில் வணிகத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை 'பனியா' என்று குறிப்பிடுவார்கள். காந்தியும் பனியா வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் 'சதுர் பனியா' (புத்திசாலி வணிகர்) என்றார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில், ஜாதியத்துக்கு எதிராக போராடாமல், நாட்டின் தேசப்பிதாவை காந்தியை கூட ஜாதி கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதன் மூலம் பாஜகவின் குணம், சித்தாந்தம் வெளிப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மகாத்மா காந்தி குறித்து கூறிய அமித்ஷா, தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும். தான் கூறியதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், வேண்டுமென்றே தெரிவித்த துரதிருஷ்டவசமான கருத்தாகும் என்றார்.
அமித்ஷாவின் கருத்துக்கு காந்திஜியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி கூறுகையில், எனது தாத்தா காந்தி, அவர் குறித்து விமர்சித்து வரும் கேலிச் சித்திரங்களைக் கண்டு சிரிப்பார். அதுபோல் அமித்ஷாவின் கருத்தை கேட்டிருந்தால் அதன் சுவையில்லாத தன்மை, குறும்புத்தனமான பேச்சு ஆகியவற்றை கண்டு சிரித்திருப்பார்.