கேரள சினிமாவுக்கு நேரம் சரியில்லை.. சொற்ப தொகையை நிவாரண நிதியாக அறிவித்து வறுபடும் "அம்மா"
கேரள நடிகர் சங்கம் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரள திரைத்துறையினருக்கு நேரம் சரியில்லை போலும். முன்பு திலீப்பால் வசை பட்டது. இப்போது கேரள புயல் நிவாரண நிதியாகசொற்ப தொகையைக் கொடுத்து வாங்கிக் கட்டி வருகிறது.
இயற்கையின் சீற்றம் கேரளாவுக்கு கொஞ்சம் அதிகமாக அடித்துவிட்டது. அதனால்தான் இவ்வளவு பெரிய பாதிப்பும், இழப்பும். அந்த மாநில முதல்வர் துரித நடவடிக்கையில் இறங்கி சேத, வெள்ள பகுதிகளை நேரடியாக பார்வையிட்டும் மீட்பு நடவடிக்கைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார். அத்தோடு எம் மக்களுக்கு உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்ததும், பாகுபாடு இல்லாமல் வெள்ள நிதி சேர்ந்து வருகிறது.
கமல், சூர்யா, கார்த்தி
நம்ம மாநிலத்தில் இருந்தே பல உதவிகள் அந்த மாநிலத்திற்கு போய் கொண்டிருக்கிறது. தமிழக அரசு முதல்வேலையாக நிதி கொடுத்து தன் கடமையை ஆற்றியது. திமுக சார்பில் 1 கோடி ரூபாய் என ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதேபோல, நடிகர்கள் சூர்யா, கார்த்தி இரண்டு பேரும் சேர்ந்து 25 லட்சம் தந்தனர். கமல் ரூ.25 லட்சம், விஜய் டிவி ரூ.25 லட்சம் என தங்கள் பங்களிப்பாக தந்து உதவினர். இதுபோல பலரும் நம் மாநிலம் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் உதவிகள் கேரளத்துக்கு குவிந்து வருகின்றன.
அம்மா... சங்கம்
நமக்கெல்லாம் அந்த மாநிலத்தவர்கள் ஒட்டா? உறவா? இல்லை ரத்தபந்தமா? ஒன்றுமே இல்லை. வெறும் மனிதாபிமானம். ஒரு சகோதரத்துவம். அப்படித்தானே நினைத்து செய்து வருகிறோம். ஆனால் தன் கண்முன்னாலேயே அழிவை நேரடியாக பார்த்துவரும் கேரள நடிகர்கள் சங்கம் என்ன தெரியுமா செய்தது? வெறும் 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. நடிகர் சங்கத்தின் பெயர் என்ன தெரியுமா "அம்மா"-வாம். 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தும் இந்த தொகைதான் வெள்ள நிவாரண நிதிக்கு போய் சேர்ந்திருக்கிறது.
கேரள மக்கள் கண்டனம்
ஒரு படத்தில் நடிக்க கோடி கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களும் 10 பைசாகூட முதல்வர் நிவாரண நிதிக்கு தராமல் உள்ளனர். இப்படி வெறும் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதற்கு பயங்கரமான கண்டனங்களும் அந்த மாநிலத்திலேயே எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் கண்டபடி அம்மாநில மக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்குது. அம்மாநில மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கு. மிகப்பெரிய அழிவை நோக்கி மாநிலம் சென்று கொண்டிருக்கிறது. இவ்வளவு இருந்தும் எப்படி 10 லட்சம் ரூபாயை தர மனம் வந்திருக்கும்? மக்களும், ரசிகர்களும் வறுத்தெடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு மோகன்லாலும், மம்முட்டியும் ஆளுக்கு 25 லட்சம் ரூபாய் தந்திருக்கிறார்கள்.
எந்த கணக்கில் சேர்ப்பது?
மற்றவர்கள் அதுகூட இல்லை. பக்கத்து மாநில ஆட்களான தமிழ்நாட்டுக்காரங்க இவ்வளவு உதவி செய்யறாங்களேன்னு கூடவா யாரும் நினைச்சு பாக்க மாட்டாங்க? தமிழிலும், தெலுங்கிலுமாக மாறி மாறி நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களுக்கு கூடவா இது தெரியவில்லை? சொந்த மண் மீது அக்கறை இல்லாமல் போனது ஏன்? இவர்களை எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது?