மாலத்தீவு அதிபர் தேர்தல்: 51.39 % வாக்குகள் பெற்று அப்துல்லா யாமீன் வெற்றி
மாலே: முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்தை விட அதிக வாக்குகள் பெற்று, அப்துல்லா யாமீன் மாலத்தீவின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 9ம் தேதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் முன்னாள் அதிபரும், ஜனநாயகக் கட்சித் தலைவருமான முகம்மது நஷீத் 46.4 சதவீத ஓட்டுக்கள் பெற்று மாலத்தீவு முன்னேற்றக் கட்சித் தலைவரும், முன்னாள் சர்வாதிகாரி மவுமூன் அப்துல் கயூமின் சகோதரரான அப்துல்லா யாமினை விட முன்னிலையில் இருந்தார். அப்துல்லா 30.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
இதனை யடுத்து நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. அதில், எதிர்பாராத திருப்பமாக அப்துல்லா யாமீன் 51.39 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர் முகம்மது நஷீத் 48.61 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
மாலத்தீவு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் அப்துல்லா யாமீன் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கிறார்.
கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதிபர் பதவியிலிருந்து முகம்மது நஷீத் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அதனையடுத்து கடந்த ஓராண்டாக மாலத்தீவில் குழப்பமான நிலை காணப்பட்டது. தற்போது தேர்தல் நடத்தப்பட்டதன் மூலம், அந்தக் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.